ஆப்நகரம்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிரடி திட்டங்கள் இதோ- அமைச்சர் வேலுமணி விளக்கம்!

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மாநில அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்று உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார்.

Samayam Tamil 26 Jun 2019, 3:56 pm
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் தவித்து வருகின்றனர். மாநில அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil SP Velumani


இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இவற்றை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகள் 6 மணிக்கு ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது மக்களின் பிரச்சனைகளை அறிந்து, அவற்றை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு திட்டம் மிக அருமையான திட்டம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் ஆகும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டத்தை, நாமும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இதனை உறுதி செய்த பின்னரே, வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. எனவே இனி வருங்காலங்களில் இத்திட்டம் ஒழுங்காக செயல்படுகிறதா என்று ஆராய குழு போடப்பட்டுள்ளது.

எங்காவது குறைகள் இருந்தால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று நிறைய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

மேலும் உள்ளாட்சி துறை மூலமாகவும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அவ்வப்போது வழங்கி வருகிறது. முதலமைச்சர் உத்தரவுப்படி ஆய்வுக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழக மக்களின் குடிநீர் பிரச்சனை தீரும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

அடுத்த செய்தி