ஆப்நகரம்

ஒரு கோடியை தொட்டாச்சு; கொரோனாவை விரட்ட தமிழகம் நிகழ்த்திய ஆச்சரியம்!

தமிழகத்தில் நேற்று வரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளன.

Samayam Tamil 2 Nov 2020, 8:36 am
இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களின் பட்டியலில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி, 7,27,026 பேருக்கு தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6,94,880 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 11,152 பேர் பலியாகியுள்ளனர். 20,994 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழகம் மட்டும் தான் முழுவதுமாக RT-PCR பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil Corona Tests in Tamil Nadu


இதன்மூலம் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பரிசோதனைகள் செய்ய முடியும். கடந்த 24 மணி நேரத்தில் 73,012 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் செய்யப்பட்ட மொத்த RT-PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1,00,29,222 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதன்மூலம் உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஒரு கோடிக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்ட மூன்றாவது மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் விவரம்.

கொரோனாவை விரட்ட இப்படியொரு ஆச்சரியம் நிகழ்த்திய புதுச்சேரி!

* மார்ச் - 2,546
* ஏப்ரல் - 1,17,394
* மே - 3,72,416
* ஜூன் - 6,78,721
* ஜூலை - 14,87,455
* ஆகஸ்ட் - 21,55,009
* செப்டம்பர் - 25,40,876
* அக்டோபர் - 26,02,160

கடந்த மாதத்தின் தொடக்கத்தில் நாளொன்றுக்கு 90 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்து 70 ஆயிரம் என்ற நிலையில் இருக்கிறது. அக்டோபர் 25 முதல் 31 வரையிலான 7 நாட்கள் சராசரி 75,140ஆக உள்ளது. முன்னதாக கொரோனா பரிசோதனைகள் செய்வதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின்(TNMSC) சார்பில் 88.26 லட்சம் RT-PCR கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தன.

அதில் 69.36 லட்சம் கருவிகள் நேரடியாக பெறப்பட்டுள்ளன. மேலும் 2.78 லட்சம் கருவிகள் மத்திய அரசாலும், 53 ஆயிரம் கருவிகள் நன்கொடை மூலமும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலின் விகிதம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, 7.28 சதவீதமாக இருக்கிறது. இந்த பட்டியலில் தமிழகம் நாட்டிலேயே 7வது இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி