ஆப்நகரம்

அண்ணன் என்றென்றும் நினைவுகூறுப்படுவார்' - மயில்சாமிக்கு உதயநிதி இரங்கல்

நடிகர் மயில்சாமியின் இறப்புக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Feb 2023, 12:06 pm
தமிழ் திரைப்படங்களில், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மயில்சாமி (57). இவர் நேற்று இரவு கேளம்பாக்கம் அருகே உள்ள சிவன்கோயிலில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது, பிரபல இசை கலைஞர் சிவமணியின் டிரம்ஸ் வாசிப்பை விரும்பி பார்த்துள்ளார். பின்னர் விழா முடிந்ததும் இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
Samayam Tamil udhayanithi


இந்தநிலையில், அதிகாலை திடீரென மயில்சாமி மாரடைப்பால் இறந்துள்ளார். இந்த தகவல் தமிழக மக்களுக்கும், திரையுலகத்துக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்களும், சினிமா பிரபலங்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மயில்சாமியின் இறப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறுப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.

மயில்சாமி: எம்.ஜி.ஆர் பக்தன்... ஆனா அதிமுக மீது என்ன கோபம்? 2021 தேர்தல் பிளாஷ்பேக்!

அதுபோல, நடிகர் ராதாரவி தெரிவிக்கையில், மயில்சாமி எம்ஜிஆரின் மிகப்பெரிய வெறியன், மயில்சாமியின் இழப்பு என்பது திரைத் துறைக்கே மிகப்பெரிய இழப்பு. நல்ல மனிதர், கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர் என்று கூறினார். காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மக்களை மகிழ்விக்கும் கலைஞன் நடிகர் மயில்சாமி அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உதவி என்று கேட்டு வருபவருக்கு உதவும் நல்லுள்ளம் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி