ஆப்நகரம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு ஒத்தி வைப்பு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 10 Aug 2020, 5:54 pm
முதல்வர் பழனிசாமி மீது கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர்.
Samayam Tamil உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி திமுக, டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, சபாநாயகர் உத்தரவு எதையும் பிறப்பிக்காத நிலையில் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்கவோ முடியாது. ஆனால், சபாநாயகர் பிறப்பிக்கும் உத்தரவு நீதிமன்றத்தின் மறுஆய்வுக்கு உட்பட்டது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கனிமொழி சொல்ற மாதிரி நடந்திருக்காது: ஹெச்.ராஜா ஆருடம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து திமுகவின் சக்கரபாணி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விசாரிக்க கடந்த பிப்ரவரி மாதம் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, 3 ஆண்டுகளாக சபாநாயகர் முடிவெடுக்காமல் ஏன் கால தாமதம் செய்தார் என கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக சபாநாயகர் அவகாசம் கோரினார்.

தமிழக சபாநாயகர் அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கை 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இரண்டு முறைக்கு மேல் சபாநாயகர் காலஅவகாசம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி