ஆப்நகரம்

தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு; மக்கள் மகிழ்ச்சி

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Jul 2019, 9:34 am
தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அரியலூர், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain 1


கோடை காலம் முடிவடைந்து ஒன்றரை மாதங்களை கடந்த பின்னரும், தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் லேசாக மழை பெய்த நிலையில், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை நேரத்திற்கு பின்னர் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், விருத்தாசலம், நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

சென்னையை பொருத்தளவில் கிண்டி, அண்ணா சாலை, பல்லாவரம், தாம்பரம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவு நேரத்தில் குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்நிலையில், பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி