ஆப்நகரம்

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்

பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் புதுச்சேரியில் இன்று காலமானார்

Samayam Tamil 6 Jul 2020, 5:33 pm
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி, இன்று பிற்பகலில் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92. இந்தத் தகவலை மன்னன் மகனும், பாரதிதாசன் அறக்கட்டளைத்தலைவருமான கவிஞர் கோ.பாரதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil மன்னர் மன்னன்
மன்னர் மன்னன்


புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்தவர்.

தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளிட்டவர்.

11, 12 ஆம் வகுப்புகளுக்கு பழைய பாடத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதியாகியான மன்னர் மன்னன், மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி ‌ஆர்., ஜெயலலிதா, தலைவர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றவர்.

இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில் இன்று காலமானார். அவரது இறுதி நிகழ்வுகள் புதுச்செரியில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி