ஆப்நகரம்

எஸ்.வி.சேகரை கைது செய்ய மாட்டோம்; தமிழர் கழகம் என்றால் கைது செய்வோம்!

தேசிய கொடியை அவமதித்து முகநூலில் பதிவிட்ட தமிழர் கழகத்தின் மாநில செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்

Samayam Tamil 3 Sep 2020, 2:54 pm
நடிகர் எஸ்.வி.சேகர் அண்மையில் தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு போட்டதற்கு காவியை களங்கம் என கூறிய முதல்வர், சுதந்திரத் தினத்தன்று தேசியக்கொடியில் காவியை நீக்கிவிட்டு பச்சை, வெள்ளை நிறம் கொண்ட கொடியை ஏற்றுவாரா என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தார்
Samayam Tamil எஸ்.வி.சேகர்(இடது), மணிகண்டன்(வலது)
எஸ்.வி.சேகர்(இடது), மணிகண்டன்(வலது)


இதனைத்தொடர்ந்து, தேசியக் கொடியை எஸ்.வி.சேகர் அவமதித்ததாக ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் பிரிவு 2 ன் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் போது, தேசிய கொடியை அவமதித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு எதிர்காலத்தில் இது போன்ற செயலை செய்ய மாட்டேன் என எஸ்.வி.சேகர் உறுதியளித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வாகிறார்களா துரைமுருகன், டி.ஆர்.பாலு?

இதையடுத்து, தேசிய கொடி அவமதிப்பு தொடர்பான முன் ஜாமின் வழக்கில் வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்காலத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்று அந்த மனுவில் அவர் உறுதியளித்துள்ளார். இதனை ஏற்ற நீதிமன்றம், முன் ஜாமின் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, தேசிய கொடியை அவமதித்து முகநூலில் பதிவிட்ட தமிழர் கழகத்தின் மாநில செயலாளர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். “புறக்கணிப்போம் ஆகஸ்ட் 15”, “1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் தமிழ்தேசம் இந்திய ஒன்றிய சிறையில் அடைக்கப்பட்ட நாள்” என்று எழுதப்பட்ட வாசகங்களை தேசியக்கொடி எரிவது போன்ற புகைப்படத்துடன் தனது முகனூல் பக்கத்தில் மணிகண்டன் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தேசிய கொடியை அவமதித்த குற்றம் என்னவோ ஒன்றுதான். ஆனால், எஸ்.வி.சேகர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும், மணிகண்டன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையும் வேறு வேறாக உள்ளது. எஸ்ச்.வி.சேகர் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிந்தாலும், அவரை போலீசார் கைது செய்யவில்லை. நீதிமன்றம் சென்ற பின்னர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் என்று கூறிய காவல்துறை மணிகண்டனை மட்டும் உடனடியாக கைது செய்துள்ளது. ஒரே குற்றம் ஆனால் தண்டனை மட்டும் வேறு வேறு என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி