ஆப்நகரம்

Tamilisai Son Airport Issue: பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட தமிழிசை மகன்; ஏர்போர்டில் செம சண்டை போட்ட தமிழிசை!

பாஜக ஒழிக என்று தமிழிசை மகன் கூறியதால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 10 Jun 2019, 3:51 pm
தமிழகத்தில் பாஜகவை அழுத்தமாக பதியச் செய்தவர்களில் தமிழிசைக்கு முக்கிய இடமுண்டு. அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருமுறை பதவி வகித்துள்ள அவர், தமிழக மக்களிடம் இருந்து பெறப்பட்ட வசவுகள் ஏராளம். மத்திய அரசு செய்யும் அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பேற்று, ஏராளமான சிரமங்களுக்கு ஆளானவர்.
Samayam Tamil Tamilisai


கட்சிக்கு எவ்வளவோ விஸ்வாசமாக இருந்தாலும், பாஜக தலைமையால் எந்தவித பலனும் கிடைக்காதவர். இரண்டாவது முறை பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்த சூழலிலும், மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதது தமிழக பாஜகவினர் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து, அவரது கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில், கனிமொழிக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் திருச்சி செல்வதற்காக, இன்று தனது மகன், மகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு வழக்கம் போல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தமிழிசையின் மகன் சுகந்தன், பாஜகவிற்கு எதிராக கூச்சலிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு அதிமுக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று கூறினார். இது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடனே தமிழிசை உதவியாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுகந்தனை அமைதிப்படுத்தி, விமான நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர் உள்ளே சென்ற தமிழிசை, தனது மகனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே குடும்பத்தாருடன் வீட்டிற்கு திரும்பினார். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

முன்னதாக தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற போது, மாணவி சோபியா பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டார். அப்போது அவருடன் பயணித்த தமிழிசை வாக்குவாதம் செய்தார். சோபியாவிற்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அடுத்த செய்தி