ஆப்நகரம்

சுஜித்தின் மரணத்தை வைத்தும் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்... முதல்வர் குற்றச்சாட்டு

சிறுவன் சுஜித் மரணத்தை வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக அரசின் மீது குற்றம்சாட்டி வருகிறார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Oct 2019, 7:14 pm
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளி்ட்டோர் நடுக்காட்டுப்பட்டியில் அவர்களின் இல்லத்துக்கு இன்று மாலை 6 மணியளவில் வருகை புரிந்தனர்.
Samayam Tamil epssn


அங்கு சுஜித்தின் உருவப்படத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுஜித்தை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தமிழக அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டது.

பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும், என்எல்சி, ஓஎன்ஜிசி, எல் அண்ட் டி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களின் முன்னிலையிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், துரதிருஷ்டவசமாக சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை.

இந்த துயரச் சம்பவத்தை வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

"மீட்புப் பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டதால் தான் சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போனது என்றும், மீட்புப் பணிக்கு ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை? என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசை குறைகூற வரவில்லை ... சுஜித் மரணத்துக்கு அரசின் மெத்தனம் தான் காரணம்: மு.க.ஸ்டாலின்

சுஜித் வில்சனை மீட்க அரசு இயந்திரம் எந்த அளவுக்கு தொடர் முயற்சியை மேற்கொண்டது என்பது உலகுக்கு தெரியும்.

கடந்த 2009 -ஆம் ஆண்டு, திமுக ஆட்சியின்போது தேனி மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். அந்தச் சிறுவன் இறந்த நிலையில் தான் மீட்கப்பட்டான்.

அப்போது ஏன் அவரை மீட்க தேவையான தொழில்நுட்பங்களை திமுக அரசு பயன்படுத்தவில்லை? மீட்புப் பணிக்கு ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை?

எனவே, சிறுவன் சுஜித் மரணத்திலும், தமிழக அரசின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார் என்பது தான் உண்மை. அவர் சொல்வது அனைத்தும் பொய்.

சிறுவன் சுஜித்தை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்.

சுஜித்தை இழந்து தவிக்கும் அவரது பெற்றோர், உற்றார், உறவினர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் கூறினார்.

அடுத்த செய்தி