ஆப்நகரம்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

Samayam Tamil 5 Jun 2020, 3:37 pm
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்தியாவில் தலை தூக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதையளிக்கும் வகையில் உள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ள பரிசோதனையால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இதுவரை 18,670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 3,000த்தை தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2,000த்தை தாண்டியுள்ளது. அடையாறு, அண்ணாநகர், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000த்தை தாண்டியுள்ளது.

அன்பழகனின் உடல்நலம் எப்படி உள்ளது? விசாரித்த முதல்வர்!

இந்த நிலையில், சென்னையில் தடுப்பு பணிகள் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதன்படி, மண்டலம் 3,4,5க்கு அமைச்சர் ஜெயக்குமார், மண்டலம் 13,14,15க்கு அமைச்சர் கே.பி.அன்பழகன், மண்டலம் 8,9,10க்கு அமைச்சர் காமராஜ், மண்டலம் 1,2,6க்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மண்டலம் 7,11,12க்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு உத்தரவு


முன்னதாக, சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா பாதிப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி