ஆப்நகரம்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 21 Jan 2022, 4:29 pm
கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்


பள்ளிகளை பொறுத்தவரை பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதாவது, 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது தொற்று பரவலை பொறுத்து நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் விதத்தில் சத்துணவு பெறும் பள்ளி குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
இதன்படி 20.01.2022 முதல் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவ / மாணவியர் உட்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அரிசி - 1,100 கி.கி அளவு, பருப்பு - 1/2 கி 94 கிராம், கொண்டை கடலை/பாசி பருப்பு - 40 கிராம் மற்றும் முட்டை - 11 முட்டைகள் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். அதேபோல் உயர் தொடக்க/உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி - 1,650 கி.கி, பருப்பு - 890 கிராம் , கொண்டை கடலை/பாசி பருப்பு - 40 கிராம் மற்றும் முட்டை - 11 முட்டைகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி) வரும் குழந்தைகளுக்கு 10.01.2022 முதல் அங்கன்வாடி பணியாளர்களால் சத்துணவு திட்டப் பயனாளி குழந்தைகளுக்கு அவர்தம் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு மற்றும் முட்டை உலர் உணவுப் பொருட்களாகவும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அவர்தம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உலர் உணவாக தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்டதை விட பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை மற்றும் கொண்டைக் கடலை / பாசி பயிறும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 42,13,617 பள்ளி மாணவ மாணவியர் பயனடைவர். இந்த உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் கண்காணிக்கப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி