ஆப்நகரம்

டாஸ்மாக் மேல் உள்ள அக்கறை தமிழர்கள் மீது வேண்டாமா? கனிமொழி காட்டம்!

வெளிநாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு கவனம் செலுத்துவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 20 May 2020, 11:03 am
திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil கனிமொழி


இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் டாஸ்மாக் கடைகள் நேரம் நீட்டிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது மட்டுமல்லாமல் நேரத்தை அதிகரித்து டோக்கன் முறைப்படி மது பானம் விநியோகிக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கான நுகர்வோர்களை இழுப்பதில் ஆர்வம் காட்டும் அரசு வெளி நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

“வெளி நாடுகளில் தமிழர்கள் சில மாதங்களாக பெரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கல்வியைத் தொடரமுடியாமல், விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் தங்குவதற்கும், உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு உடனடியாக மீட்டுக் கொண்டுவரப்பட வேண்டும்.

கொரோனா: வேகமெடுக்கும் பாதிப்பு, என்ன செய்யப் போகிறது தமிழகம்?

“தமிழ்நாட்டுக்கு நேரடியாக ஒன்றிரண்டு வாகனங்களே உள்ளன. பிற விமானங்கள் மற்ற மாநிலங்களில் தரையிறங்குகின்றன. அதில் தமிழர்கள் மிகக் குறைவானவர்களே வருகின்றனர். மேலும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து வரவேண்டியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களும் விதிவிலக்கு அல்ல” என்று கனிமொழி கூறியுள்ளார்.

செங்கல்பட்டில் மீண்டும் சுங்கக் கட்டணம்: விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்!

தமிழர்கள் ஊர் திரும்ப தமிழக அரசு அனுமதியளிக்க மறுக்கிறது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், “தமிழ்நாட்டுக்கு திரும்புவர்கள் கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள்ள் இருக்கும்போது தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே குறியாக உள்ளது. இது கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்குமோ என்ற பெரிய பயம் உள்ளது” என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி