ஆப்நகரம்

தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கியதில் கோபுர சிற்பம் சேதம்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இடி தாக்கி கேரளாந்தகன் நுழைவு வாயிலின் சிற்பம் சேதமடைந்தது.

Samayam Tamil 6 Jun 2018, 10:19 am
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இடி தாக்கி கேரளாந்தகன் நுழைவு வாயிலின் சிற்பம் சேதமடைந்தது.
Samayam Tamil cats
தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கியதில் கோபுர சிற்பம் சேதம்!


தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் வாட்டிவதைத்த நிலையில், நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்தது. இடியுடன் பெய்த கனமழையால் அப்போது மின்னல் தாக்கி பெரிய கோயில் வளாகத்தில் உள்ள கேரளந்தகன் கோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டது.

இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சுதைச் சிற்பமான வலதுபுற கீர்த்தி முகத்தில் சிறுபகுதி சேதமடைந்தது. சேதமடைந்த பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே சிதறின. இதில், சில கற்கள் கீழே விழுந்தன.

இந்த நேரத்தில் கோபுரத்தின் அருகில் உள்ள காலணி வைப்பகத்தின் குளிர்சாதன பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதுடன் மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பெரிய கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தொல்லியல் துறை, கோயில் பணியாௗர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

கோபுரம் சேதம் அடைந்ததையடுத்து பரிகார பூஜைகளுக்குப் பின் இரண்டொரு நாளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு ராஜராஜன் நுழைவு வாயிலில் இடி தாக்கி கலசம் சேதமடைந்தது. 2011-ம் ஆண்டு பெருவுடையார் சந்நிதியில் இடி தாக்கி விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி