ஆப்நகரம்

தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறப்பு?

தமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 20 May 2020, 3:23 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு முழுவதும் முடக்கப்பட்டது. மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கல்வி நிலையங்கள், கோயில்கள் உள்பட மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. வழக்கமாக பூஜைகள் கோயில்களில் நடைபெற்ற போதும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்புக்கு தகுந்தவாறு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இயக்கங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், போக்குவரத்து, தொழிற்சாலைகள் இயக்கம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசுகள் சில தளர்வுகளை அளித்து வருகிறது.

இதனிடையே, சரீர விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு மத வழிபாட்டு தலங்களை தரிசனத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு பதிலளித்தது. இதனையேற்று அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரு மேகங்களால் சூழப்பட்ட கொல்கத்தா..! சற்று நேரத்தில் கரையை கடக்கும் ஆம்பன்

அதேசமயம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை ஜூன் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கி, நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் குறிப்பிட்ட நேரத்தில் கோயில்களில் தரிசனம் செய்ய தீர்மானிக்கப்பட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்களில் சரீர விலகலை கடைபிடித்து, கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பக்தர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் கோயில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த செய்தி