ஆப்நகரம்

தமிழகத்தில் தள்ளிப்போகும் கோயில்கள் திறப்பு!!

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 31 May 2020, 4:06 pm
நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை தளர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (மே 30) பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், முக்கியமாக வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil temples open in tamil nadu postponed
தமிழகத்தில் தள்ளிப்போகும் கோயில்கள் திறப்பு!!

மத்திய அரசின் இந்த அறிவிப்பையடுத்து, தமிழகத்தில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் கூடிய விரைவில் திறக்கப்பட்டுவிடும் என்று பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், பொதுமுடக்க தளர்வு குறி்த்து தமிழக அரசு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம்சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் தடை ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால் அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவித்துள்ளதையொட்டி, தமிழகத்தில் வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல் உணவகங்களில் 50 சதவீத நபர்கள் அமர்ந்து உணவருந்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துள்ள அரசு, தற்போது உணவகங்களுக்கு ஏறக்குறைய வழக்கம்போல் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில், கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்க விதித்திருந்த தடை மட்டும் நீட்டித்துக் கொண்டே போவது ஏன் என்ற கேள்வியையும் பக்தர்கள் முன்வைக்கின்றனர்.

மேற்கு வங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நாளை ( ஜூன் 1) முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி