ஆப்நகரம்

தரம் உயரும் பேரூராட்சிகள் எவை? தமிழ்நாடு அரசு முடிவு!

தமிழ்நாட்டில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 10 மாதிரி பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன.

Samayam Tamil 2 Aug 2021, 10:07 am
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது.
Samayam Tamil panchayat towns


அந்த வகையில் தேர்தல் அறிக்கையில் புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிக்கப்போகும் அதிமுக மாஜி அமைச்சர்கள் ? தனிப்பிரிவு அமைப்பு!
இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “திமுக தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சில பகுதிகளில் உள்ள நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். சில பகுதிகளில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மூன்று நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி பேரூராட்சிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக, 10 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலாத் தலங்களுக்கு தடை: அரசு வெளியிடும் அறிவிப்பு?
தமிழகத்தில் மொத்தம் 528 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 12 சிறப்பு நிலை, 222 தேர்வு நிலை, 214 முதல் நிலை, 80 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் உள்ளன. இவை 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலை உட்கட்டமைப்பு மற்றும் திடக்கழிவுமேலாண்மை திட்டம் போன்றபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி பேரூராட்சிகளை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், கோத்தகிரி, சென்னிமலை, மாமல்லபுரம், பெருந்துறை, முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய 10 பேரூராட்சிகள் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி