ஆப்நகரம்

பத்து ஆண்டுகளாக நீதிக்கு காத்திருக்கும் பார்வையற்ற மூதாட்டி

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் விசாரிக்கப்படவில்லை என பார்வையற்ற மூதாட்டி ஒருவர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் நீதி வேண்டி பதாகை ஏந்தி அமர்ந்துள்ளார்.

TOI Contributor 11 Jul 2016, 10:40 pm
கோவை: பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் விசாரிக்கப்படவில்லை என பார்வையற்ற மூதாட்டி ஒருவர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் நீதி வேண்டி பதாகை ஏந்தி அமர்ந்துள்ளார்.
Samayam Tamil ten years on visually impaired woman seeks justice
பத்து ஆண்டுகளாக நீதிக்கு காத்திருக்கும் பார்வையற்ற மூதாட்டி


கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு நீதி வேண்டும் என்று கூறி, கோவை கணபதி பகுதியை சேர்ந்த சுமார் 70 வயதான ராஜாத்தியம்மாளும், அவரது 45 வயது மகன் சக்திவேலும் கண்ணீருடன் பதாகை ஏந்தி அமர்ந்துள்ளார்.

இதுகுறித்து சக்திவேலிடம் கேட்ட போது, கடந்த 2006-ஆம் ஆண்டில் எனது தாயின் உறவுக்கார பெண்ணுடன், அதாவது எனது தாய்க்கு பேத்தி முறையான பெண்ணுடன் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அதன்பின்னர், அப்பெண்ணுக்கு நாங்கள் 30 சவரன் தங்க நகைகள் கொடுத்தோம். ரூ.5,000 ரொக்கம் அளித்தோம், திருமணத்துக்கான சேலைகளும் எடுத்துக் கொடுத்தோம். அதன்பின்னர், 15 நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் அவரது பெற்றோர்கள்.

இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, ஆண்களை புறக்கணித்தனர். நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் என்றோம், ஆனால், அவர்கள் என் மீது போலி கொலை வழக்கு போட்டு விடுவோம் என்று மிரட்டினர். எனினும் கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். மேலும், 2014-ஆம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.

இதனிடையே, அந்த புகாரின் பேரில் கட்டப் பஞ்சாயத்து போன்று விசாரணை நடத்தப்பட்டது என்று கூறிய சக்திவேல், "உன் பேத்திக்கு தானே நகை கொடுத்தாய். எனவே, சந்தோஷப் பட்டுக்கொள்" என்று தனது தாயிடம் கூறி அந்த புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

ராஜாத்தியம்மாள் இதுகுறித்து கூறும்போது, எனது பையன் ஓட்டுனராக இருக்கிறான். அவனது வண்டியில் தற்போது ரூ.1 லட்சம் அளவுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார் வேதனையுடன்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட சக்திவேலுக்கு, இந்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது என்ற பதிலே கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி