ஆப்நகரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: இந்த முறை அந்த தவறு நடக்காதாம்!

பொங்கல் பரிசுப் பொருள்களுக்கான டெண்டர் விவரங்கள் குறித்து விசாரித்ததில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 30 Nov 2021, 8:43 am
பொங்கல் பரிசுப் பொருள்களுக்கான டெண்டர் விவரங்கள் குறித்து விசாரித்ததில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil tn pongal gift


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசுப் பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.
மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு? ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்காக ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 45 நாள்களே உள்ள நிலையில் 2 கோடியே15 லட்சத்து 48 ஆயிரத்து 060 குடும்பங்களுக்கு இந்தப் பொருள்கள் வழங்கப்பட உள்ளதால் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்ற பொருள்களை கொள்முதல் செய்ய டெண்டர் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருவதாக கூறுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு 4000 ரூபாயும் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் டெண்டர் விட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக அப்போதே தகவல் வெளியாகின.
ஓமைக்ரான் பரவல்: தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு!
இது குறித்து அப்போதே நமது சமயம் தமிழில் செய்தி வெளியிட்டோம். “அதில் தேயிலையை மட்டும் குன்னூர் இன்கோசர்வ் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாகவும் மீதமுள்ள 13 பொருள்கள் கொள்முதலுக்கான டெண்டர் அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் முழுவதையும் கொடுத்தால் காலதாமதமாகும் என்பதால் பின்னர் அவசர அவசரமாக வேறு மூன்று நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதில் ஒரு நிறுவனம் சொர்ண பூமி ஆகும். இது கடந்த அதிமுக அரசின் பருப்பு கொள்முதல் ஊழல் புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்தின் துணை நிறுவனம் என்று கூறப்படுகிறது.

மேலும் மளிகைப் பொருள்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. சில பொருள்களுக்கு வரி கிடையாது.
திமுக அரசு மீது ஊழல் புகார் ஆரம்பித்துவிட்டதா? 88 கோடி ரூபாய் இழப்பு!
உதாரணமாக கோதுமை மாவு, கடலைப்பருப்பு, ரவை, உப்பு, புளி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதேசமயம் சர்க்கரை, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி. இவற்றில் அதிகபட்சமாக குளியல் சோப், துணி துவைக்கும் சோப்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இவற்றை தனித்தனியாக கொள்முதல் செய்தால் தனித்தனியாக ஜிஎஸ்டி கணக்கிடப்படும். மொத்தமாக கொள்முதல் செய்தால் அந்தப் பொருள்களில் எதற்கு ஜிஎஸ்டி அதிகமோ, அந்த விலையே அனைத்து பொருள்களுக்கும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் பை ஒன்றுக்கு 20 ரூபாய் வர வேண்டிய ஜிஎஸ்டி 62 ரூபாய் என்ற அளவில் வந்துள்ளது. இதனால் ஒரு பைக்கு 42 ரூபாய் அதகமாகியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவதால் எவ்வாறு டெண்டர் விடப்பட உள்ளது என்பது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கடந்த முறை நீங்கள் குறிப்பிட்ட சிக்கல் இருந்தது உண்மை தான். திமுக ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்துக்குள் மக்களுக்கு அந்த தொகுப்பு வழங்கப்பட்டது. கொரோனா பரவலும் மிக உச்சத்தில் இருந்தது. மக்களுக்கு நிவாரண உதவி உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதால் அவசர அவசரமாக அந்த பணி நடைபெற்றது. அதனால் சில தவறுகள் நடந்தது. தற்போது அப்படியில்லை.

இரு மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் அரசாணை வெளியிட்டு பணியை துரிதப்படுத்தியுள்ளார். எனவே சரியான நபர்களுக்கு டெண்டர் வழங்கப்படும், எப்படி கொள்முதல் செய்தால் குறைவான விலைக்கு நிறைவான தரத்தில் பொருள்களை வாங்க முடியுமோ அதை ஆராய்ந்து செயல்படுத்துகிறோம்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அடுத்த செய்தி