ஆப்நகரம்

காய்கறி வாகனத்தில் குட்கா... போலீசார் விசாரணை!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காய்கறி ஏற்றி செல்லும் வாகனத்தில் குட்கா பீடி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 29 Apr 2020, 7:01 pm
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil காய்கறி வாகனத்தில் குட்கா போலீசார் விசாரணை


இந்த நிலையில் காய்கறி என்ற பெயரில் தொடர்ந்து குட்கா, பீடி கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தில் குட்கா பீடிகளை மறைத்துவைத்து கொண்டு செல்வது தொடர் கதையாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆலங்குளத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் உணவு பொருட்கள், காய்கறிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குளம் சோதனைச் சாவடியில் இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளா உள்ளிட்ட பிறபகுதிகளுக்கு செல்லும் வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா மூட்டைகள், பீடி கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் 4 வாகனங்களை பிடித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோல் சம்பவம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி