ஆப்நகரம்

DMK: திமுகவிற்கு தாவும் தங்கதமிழ்ச்செல்வன்; ஓபிஎஸிற்கு ஈபிஎஸ் வைத்த செக் தப்பியதா!

அமமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தங்கதமிழ்ச்செல்வன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 27 Jun 2019, 8:13 pm
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் சமீபத்தில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Samayam Tamil Thanga Tamil Selvan


அமமுகவின் ஐடி விங் மூலம் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்கள் செய்யப்படுவதாகவும், தனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தேனியில் கட்சி கூட்டத்தை நடத்தியதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

அதேசமயம் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் டிடிவி தினகரனை திட்டினார். இதுகுறித்து கேட்டதற்கு, விரைவில் தங்கதமிழ்ச்செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், தேனி மாவட்டத்திற்கு அமமுக சார்பில் வேறு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் ஒரு தீவிரவாத தலைவர் போன்று செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார். இனிமேல் அமமுகவில் இணைந்து செயல்படும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மீண்டும் தாய்க் கழகமான அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி உடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

முதலமைச்சர் பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒத்துவராது. இருவருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே ஓபிஎஸின் சொந்த ஊரான தேனியை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வனை, மீண்டும் கட்சியில் சேர்க்க ஈபிஎஸ் திட்டம் தீட்டினார்.

அவ்வாறு செய்தால் ஓபிஎஸ்ஸை மட்டம் தட்டிவிடலாம் என்றும், அவருக்கு பதிலாக தேனியில் தங்கதமிழ்ச்செல்வன் மற்றொரு சக்தியாக வளர்த்துவிடலாம் என்று கருதினார். இதையொட்டி தேனி மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியலில் தன்னை வளர்த்த அதிமுகவிற்கு தங்க தமிழ்ச்செல்வன் துரோகம் விளைவித்துவிட்டார். அவரால் தான் 23 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த ஆண்டிபட்டி தொகுதி திமுக வசம் சென்றுவிட்டது. எனவே ஒருபோதும் அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு பின்னணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் தங்கள் குடும்பத்தை தவிர, வேறு ஒரு தலைவர் முளைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இந்த சூழலில் திமுகவிற்கு தங்கதமிழ்ச்செல்வன் தாவ இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி, திமுகவிற்கு மாறிய போது தங்கதமிழ்ச்செல்வனையும் அழைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த அதிரடி அரங்கேற உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி