ஆப்நகரம்

பாபநாசம் தொகுதி காலியானதாக அறிவிப்பு: சட்டப்பேரவையின் பலம் 230 ஆக குறைவு!

வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு காலமானதால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 2 Nov 2020, 9:21 pm
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.பி.சாமி, குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எஸ்.காத்தவராயன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தனர். தொடர்ந்து, சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனையும் சேர்த்து தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 3 தொகுதிகள் காலியாக இருக்கிறது. விதிகளின்படி, ஒரு தொகுதி காலியாக இருந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி, புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். எனவே, காலியாக உள்ள இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.

இதனிடையே, தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். இதையடுத்து, அவர் கவனித்து வந்த துறைகள் உயர்கல்வித் துறை கே.பி.அன்பழகனிடம் முதல்வரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி? ஹின்ட் கொடுத்த கமல்ஹாசன்!

இந்த நிலையில், வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு காலமானதால் அவரது தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து மொத்தம் 4 தொகுதிகள் காலியாக இருப்பதால், தமிழக சட்டப்பேரவையின் பலம் 230 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான தகவல் கடிதம் மூலமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். தொடர்ந்து, பாபநாசம் தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி