ஆப்நகரம்

தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது

Samayam Tamil 7 Dec 2020, 8:34 pm
திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எனது நிலம் உள்ளது. அதற்கான பட்டா எனது தந்தை பெயரில் வாங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் எனது நிலத்தை சட்ட விரோதமாக பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தனர். இதையடுத்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து திருச்சி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் வழக்கு துறையூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழிகாட்டுதலின் படி மாவட்ட குற்றவியல் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இது போன்று பல தனி நபர்கள் மற்றவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தங்களது பெயருக்கு சிலர் நிலத்தை பதிவு செய்து கொள்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மேலும், இது போன்ற நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களை போல நில அபகரிப்பு தடுப்பு சட்டம் தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் நிலம் அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து நிலத்தை காப்பாற்ற முடியும், எனவே ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களை போல தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டத்தை நிறைவேற்றி தனி நபர்களிடம் இருந்து நில அபகரிப்பை தடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல் நில அபகரிப்பு தடை சட்டம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்துவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறையில் கதறி அழுத சசிகலா: காரணம் என்ன?

தரிசு நிலங்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அங்கு வெள்ளை சட்டை அணிந்து கட்சிக்கொடியை ஊன்றி நிலத்தை பட்டா போட்டு விடுகின்றனர் என்று தெரிவித்த நீதிமன்றம், பொது மக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன், வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி