ஆப்நகரம்

பெண்ணை அவமதித்த கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் அதிகரிப்பு!

கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி தகவல் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 11 Oct 2020, 5:42 pm
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தெற்கு திட்டை ஊராட்சி தலைவரான பட்டியலின வகுப்பை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண், தரையில் உட்கார வைக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil தரையில் அமர வைக்கப்பட்ட பெண்
தரையில் அமர வைக்கப்பட்ட பெண்


புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம், கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் குறிஞ்சிப்பாடி மற்றும் கம்மாபுரம் ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட சமூக நல அலுவலகம் ஆகியன இணைந்து “கொரோனா பெருந்தொற்று காலகட்ட சவால்களும் பெண் குழந்தை பிறப்பை அதிகரித்தலும்” என்ற காணொளி கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய போது கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் சமம் என்ற மனப்பாங்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து வலுப்படுத்தப்பட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அன்பழகி அப்போது கேட்டுக் கொண்டார்.

தரையில் உட்கார வைக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து பெண் தலைவர்: ஸ்டாலின் கடும் கண்டனம்!

பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டம் கடலூர் மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் பிறப்பின்போது பாலின விகிதம் (Sex Ratio at Birth) 1000 ஆண் குழந்தைகளுக்கு 899 பெண் குழந்தைகள் என்று இருந்தது. இந்த எண்ணிக்கை படிப்படியாக 2017ஆம் ஆண்டில் 912, 2018ஆம் ஆண்டில் 918, 2019ஆம் ஆண்டில் 939 என அதிகரித்து 2020 செப்டம்பர் மாதம் வரை 950 என்ற நிலையை அடைந்துள்ளது.

தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 160 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன. இதில் 111 குழந்தைகள் பெண் குழந்தைகள் ஆவர். பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1071 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தற்போதுவரை 200 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்படவுள்ளது.

அடுத்த செய்தி