ஆப்நகரம்

நயினாரை ராக்கிங் செய்யும் சபாநாயகர் அப்பாவு? சட்டசபையில் கலகல!

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவும், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் பேசியது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Samayam Tamil 9 Sep 2021, 10:01 am
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டம் என்றால் காரசார விவாதம், அடிதடி, மோதல் போன்ற சம்பவங்கள்கூட நடைபெறுவது உண்டு. இங்கும் இதற்கு முன் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
Samayam Tamil appavu


இம்முறையும் கார சார விவாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் நக்கல் நையாண்டி பேச்சுகளுக்கும் பஞ்சமில்லை. ஆளுங்கட்சியை எதிர்கட்சி கிண்டலடிப்பது, எதிர்கட்சியை ஆளுங்கட்சியை கிண்டலடிப்பது அவ்வப்போது நடைபெறும். எல்லைமீறி போனால் சபாநாயகர் கட்டுப்படுத்துவார்.

ஆனால் தற்போது சபாநாயகரின் கிண்டல் பேச்சு தான் ஹைலைட்டாக உள்ளது. ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ. அப்பாவு சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை தமிழில் தனது கருத்தை தெளிவுபட நையாண்டியுடன் பேசுபவர் அப்பாவு. தொலைக்காட்சி விவாதங்களில் திமுக சார்பாக பேசிவந்தவர் தற்போது சட்டசபையை வழிநடத்துகிறார்.

சசிகலாவுக்கு கிடைத்ததா டெல்லி சிக்னல்? ஓ இதுதான் காரணமா?

ஆசிரியராக பணியாற்றிய அப்பாவு, இந்த அவையையும் ஆசிரியராக இருந்து வழிநடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் கண்டிப்பான ஆசிரியராக இல்லாமல் கலகலப்பான ஆசிரியராக வலம் வருகிறார் அப்பாவு.

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் வழக்காமக ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருப்பார்கள். அப்படியான இறுக்கமோ, பதற்றமோ அப்பாவுவிடம் துளியும் இல்லை. தனது நெல்லை தமிழில் இயல்பாக நகைச்சுவை கலந்து பேசுகிறார்.
ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு என்ன?
அதுவும் மற்ற கட்சி எம்.எல்.ஏக்களைவிட பாஜக எம்.எல்.ஏக்கள் என்றால் அப்பாவு ரொம்பவே குஷியாகிவிடுகிறார். அதுவும் தனது பகுதியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் என்றால் சொல்லவே வேண்டாம்..

நேற்று (செப்டம்பர் 8) முதல்வர் ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக பாஜக சட்டமன்ற தலைவர், நயினார் நாகேந்திரனை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார்.

அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், ‘இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் இல்லை’ என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘இந்த சட்டம்னா, நம்ம முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்தை சொல்லுறீகளோ?’ என சிரித்தபடி கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

உடனே, ‘மத்திய அரசு கொண்டுவந்த சட்டம்’ என்று கூறிய நயினார் நாகேந்திரன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.

அப்போது தவறுதலாக ‘மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை’ என்று சொல்லிவிட்டார்.

உடனடியாக சபாநாயகர், ‘அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், நன்றி’ என குறிப்பிட்டதும் மீண்டும் அவையில் சிரிப்பொலி.

இதன்பின் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன் ‘இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று கூறி பாஜக வெளிநடப்பு செய்கிறது என்று தெரிவித்தார். அதற்குள் பாஜக எம்.எல்.ஏக்கள் சென்றுவிட்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல்; தலைமை செயலாளர் முக்கிய ஏற்பாடு!
மீண்டும் குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, “உங்களைத் தனியா விட்டுட்டு போயிட்டாங்க பார்த்தீயளா?” என கிண்டல் தொணியில் பேசியதும் சட்டப்பேரவை மீண்டும் கலகலப்பானது.

அப்பாவு, நயினார் நாகேந்திரன் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இப்படி நீங்களே கலாய்ச்சுட்டா நாங்க எதுக்கு என ட்ரோல் வீடியோ எடிட்டர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

அடுத்த செய்தி