ஆப்நகரம்

மீண்டும் விசாரணைக்கு வரும் 2ஜி வழக்கு!

2ஜி வழக்கு தொடர்பான விசாரணை இன்று (அக்டோபர் 5) முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

Samayam Tamil 5 Oct 2020, 11:22 am
கடந்த பத்தாண்டுகளில் திமுக மேல் வைக்கப்பட்ட பல்வேறு விமர்சனங்களில் முக்கியமாக கருதப்பட்டது 2ஜி வழக்கு. மத்திய அமைச்சராக பதவி வகித்த ஆ.ராசா, அப்போதைய திமுக தலைவரான கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கு திமுகவுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது.
Samayam Tamil 2g case


அதன்பின்னால் வந்த தேர்தல்களில் திமுகவின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக 2 ஜி வழக்கே இருந்தது. நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த 2ஜி வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உட்பட 17 பேரை 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018, மார்ச் 19ஆம் தேதி அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர் நீதிமன்ற பிரிஜேஸ் சேத்தி நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளார்.

ட்வீட் மூலம் ட்விஸ்ட் வைக்கும் ஓபிஎஸ்: அனல் பறக்கும் அதிகார மோதல்!

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தை முடித்துக் கொண்டது. ஆனால், அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து வழக்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சிபிஐ, அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தன.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நோ ஓபிஎஸ், ஈபிஎஸ்... அடுத்த லிஸ்ட்டில் இருப்பது யார்?

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி மேல்முறையீட்டு மனுக்கள் அவசர வழக்காக, அக்டோபர் 5ஆம் தேதி (இன்று) முதல் விசாரிக்கப்படும் என உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி