ஆப்நகரம்

சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்குக்கு முகாந்திரம்-உயர் நீதிமன்றம்; திடுக்கிடும் தகவல்கள்!

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது

Samayam Tamil 30 Jun 2020, 4:12 pm
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனின் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியுள்ளது.
Samayam Tamil உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை


அதேசமயம், காவல் நிலையத்தில் போலீசார் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இருவரது உடல்களும் அதிகாரிகள் முன்பு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

மேலும், கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி கிளைச் சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அவர் புகார் தெரிவித்திருந்தார்.

தந்தை மகன் இருவரையும் விடியவிடிய லத்தியால் அடித்தது அம்பலம்..! பதைபதைக்கும் சாட்சி

இந்த சூழலில் தனது விசாரணையின் முதல்கட்ட தகவலை அறிக்கையாக மாஜிஸ்ட்ரேட்டு பாரதிதாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அதன்படி, காவல் நிலையத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்ட கடந்த 19ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டிருந்தன. சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழிந்து போகும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறை படிந்த லத்திகளை ஒப்படைக்க சாத்தான்குளம் காவலர்கள் மறுப்பு தெரிவித்தனர். விடிய விடிய தந்தையையும், மகனையும் காவலர்கள் லத்தியால் தாக்கியதாக பயத்துடன் பெண் காவலர் ஒருவர் நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ரத்தக்கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. அவற்றை அழிக்க நேரிடும். விசாரணைக்கு சென்ற இடத்தில் அசாதாரண சூழலை சாத்தான்குளம் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் உருவாக்கியதால் விசாரணையை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளிவர நேரிட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

சாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்?

இந்த நிலையில், வழக்கை நடத்தி வரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, “முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே, தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போது போலீசார் மிரட்டல் தொனியில் நடந்து கொண்டனர் என்ற மாஜிஸ்ட்ரேட் புகாரின் அடிப்படையில், குற்றவியல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சாட்சியளித்த பெண் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளது. எனவே, நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் இன்று விசாரணையை துவக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு, நாகர்கோவில் காசி வழக்குகளை விசாரிப்பவர் அனில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பல்வேறு ஆவணங்கள் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம் செய்யப்பட்டார். மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி