ஆப்நகரம்

'2 ஜி வழக்கை 'நோ ஜி' ஆக்கியவர்கள் எங்கள் வழக்கறிஞர்கள்' - ஸ்டாலின்

2 ஜி வழக்கை நோ ஜி ஆக்கியவர்கள் திமுக சட்டத்துறை வழக்கறிஞர்கள் என ஸ்டாலின் புகழாரம்

Samayam Tamil 10 Jan 2021, 9:38 pm
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை இரண்டாவது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசியவர், '' 2 ஜி வழக்கு திமுகவை அழிக்க நினைப்பவர்கள் உருவாக்கிய சதி. அந்த 2ஜியை நோ ஜி ஆக்கியவர்கள் திமுக சட்டத்துறை வழக்கறிஞர்கள்.
Samayam Tamil file pic


இப்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்தது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது, மருத்துவக் கல்லூரிகளில்‌ பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழக்கு வெற்றி, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் அளித்த ஊழல் புகார் என்று திமுகவின் வழக்கறிஞர்கள் பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை.

பொதுவாக வாசல் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்பதைப் போல வக்கீல்கள் இல்லாமல் கட்சி நடத்த முடியாது. அந்தளவுக்கு வழக்கறிஞர்களின் பணி மகத்தானது; முக்கியமானது. வழக்கறிஞர்கள் இல்லாமல் அரசியல் இல்லை, அரசியல் கட்சிகள் இல்லை. அதுதான் உண்மை. எல்லா இயக்கங்களையும் வளர்த்தவர்கள் வழக்கறிஞர்கள் தான்!

காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் வளர்த்தவர் வ.உ.சிதம்பரனார். அவர் ஒரு வழக்கறிஞர். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று போற்றப்பட்டவர் சிங்காரவேலர். அவர் ஒரு வழக்கறிஞர். சுயமரியாதை இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தவர் நாகர்கோவில் பி.சிதம்பரம். அவர் ஒரு வழக்கறிஞர். நீதிக்கட்சியில் முக்கியத் தலைவராக இருந்தவர் ஆற்காடு இராமசாமி முதலியார். அவர் ஒரு வழக்கறிஞர். இன்னும் சொன்னால் வழக்கறிஞர்களால் நிரம்பி வழிந்த கட்சி தான் நீதிக்கட்சி. அந்த வரிசையில் திராவிட முன்னேற்றக் கழகமும் வழக்கறிஞர்களால் நிறைந்த இயக்கம் தான்.

இந்தக் காலத்தில் சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இத்தகைய கருத்தரங்கை நம்முடைய வழக்கறிஞர் அணி ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் மன்றத்தில் மட்டும் பேசிக் கொண்டு இருக்க முடியாது, நீதிமன்றங்களையும் பயன்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளதைப் போல, நீதிமன்றங்களில் மட்டுமல்ல, மக்கள் மன்றங்களிலும் பேசியாக வேண்டும் என்ற நெருக்கடி உங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

'தெருவுக்கு தெரு பாஜக கொடிதாங்க, எவரையும் எதிர்த்து போட்டியிட தயார்' - குஷ்பூ பளிச்

அதன் விளைவாகத்தான் இத்தகைய கருத்தரங்கங்கள் ஏராளமாக நடத்தியாக வேண்டும்.இதுவரை திமுக வழக்கறிஞர்கள் பிரிவு 'வார் ரூம்' சென்னையில் மட்டும் பணியாற்றி வந்தது. இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 'வார் ரூம்' தனித்தனியாக அமைத்து நமது வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். அந்த அளவுக்கு பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றன'' என இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அடுத்த செய்தி