ஆப்நகரம்

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வா? சங்க பொதுச்செயலாளர் விளக்கம்!

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்த செய்திகள் வெளி வந்த நிலையில், அது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்

Samayam Tamil 14 May 2020, 3:30 pm
கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 17ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுப் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு கடுமையான சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்களின் அவசர தேவைகளுக்கான இயக்கத்துக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கார்கள் இல்லாத, வாடகை கார்களில் செல்வதற்கு வசதி இல்லாத மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

நாடு முழுவதுமான மூன்றாம் கட்ட முழு முடக்கம் வருகிற 17ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நான்காம் கட்ட முழு முடக்கம் மே 18ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் எனவும், அது முந்தைய முடக்கங்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பொதுப் போக்குவரத்திற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னைக்கு என்ன அறிவிப்பார் நிர்மலா சீதாராமன்?

இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயரும் எனவும், தற்போது ஒரு கி.மீக்கு ரூ.1.60 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ரூ.3.20ஆக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் தற்போதைக்கு கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார். முழு முடக்கத்துக்குப் பின் ஆம்னி பேருந்துகளை இயக்குவது பற்றி இதுவரை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கப்படவில்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி