ஆப்நகரம்

துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 வயது மாணவி ஸ்னோலின் உடல் 12 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Samayam Tamil 3 Jun 2018, 1:05 pm
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 வயது மாணவி ஸ்னோலின் உடல் 12 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Samayam Tamil sno
துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில், 7 பேரின் உடல்கள் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால், அதில் சந்தேகம் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, 7 பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா, நீதிபதி மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மறுபிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர், காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டனர். பின்னர் நேற்று தமிழரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்னோலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 6-ந்தேதிக்கு பிறகு இவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி