ஆப்நகரம்

மாஸ்க் போடாதவர்களுக்கு அபராதம்... அதிகாரிகள் எச்சரிக்கை!

நெல்லையில் முகக்கவசம் அணியாமலும், அடையாள அட்டை இல்லாமலும் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வந்தவர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலித்துள்ளது.

Samayam Tamil 18 Apr 2020, 3:27 pm
கொரோனா வைரஸ் கொள்ளை நோயை தடுக்க மே 3ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், பொதுமக்களில் ஒரு பகுதியினர் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றிவருகின்றனர். ஆகையால், நடவடிக்கைகளை கடுமையாக்கும் வகையில் நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், எந்தக் கிழமைகளில் வெளியே வரவேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட சிகப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிற அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil மாஸ்க் போடாதவர்களுக்கு அபராதம் அதிகாரிகள் எச்சரிக்கை


முகக்கவசங்களும், அடையாள அட்டைகளும் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்த நிலையில், நெல்லை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதன்படி, நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே நடந்த சோதனையின்போது சாலையில் வந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் என அனைவரும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மாநகராட்சி வழங்கிய அடையாள அட்டை இருக்கிறதா, முகக் கவசம் அணிந்துள்ளார்களா என சோதனை செய்து, விதிமுறைகளை மீறியவர்களுக்கு முதற்கட்டமாக இன்று 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்கள், அடையாள அட்டை வைத்திருந்து முகக் கவசம் அணியாதவர்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும், இனி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். நெல்லை டவுன், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.

அடுத்த செய்தி