ஆப்நகரம்

கணவன் மீதுள்ள சந்தேகத்தால், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்!

திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவன் மீதுள்ள சந்தேகத்தால், தனது 2 ½ வயது மகளை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்துக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 12 Sep 2018, 2:15 pm
திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவன் மீதுள்ள சந்தேகத்தால், தனது 2 ½ வயது மகளை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்துக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil baby-759
கணவன் மீதுள்ள சந்தேகத்தால், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற இளம்பெண்!


திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தில் வசிப்பவர் நாகராஜ் (வயது 23) . சுமைதூக்கும் தொழிலாளியான இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இசக்கி (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் சிவன்யாஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி, குழந்தை சிவன்யாஸ்ரீ வாயில்நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தாள். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ், உடனே குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் குழந்தையின் பாட்டி, தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தமிழ் இசக்கியிடம் விசாரித்தனர். அப்போதுதான் திடுக்கிடும் பல உண்மைகள் வெளியாகின.

தினசரி வேலைக்கு செல்லும் இவரது கணவர் நாகராஜ், இரவு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் அவரது போனில் கூட தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு எப்போதும் போனும் கையுமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில்தான் நாகராஜ், வாட்ஸ்-அப்’பில் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் இசக்கி, கணவர் செய்த துரோகத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.

அதற்காக முதலில் தனது 2 ½ வயது குழந்தையை தலையில் ஓங்கி அடித்து, வாயை பொத்தி பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்தநேரம் பார்த்து அவரது கணவர் வீட்டுக்கு வர, மர்மஆசாமி வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கி விட்டு குழந்தையை கொன்றுவிட்டதாக கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் தான், மாமியார் அளித்த புகாரின் பேரில் தமிழ் இசக்கி போலீசாரால் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த அபிராமி என்ற பெண், தனது கள்ளக்காதலனுக்காக இரு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் இன்னும் மறையாத நிலையில், , தற்போது மீண்டும் கணவன் மீதுள்ள சந்தேகத்தால் பெற்ற தாயே குழந்தையை கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி