ஆப்நகரம்

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது

Samayam Tamil 15 Sep 2020, 8:22 pm
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணாமாக வழக்கமாக நடைபெறும் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறாமல் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று மறைந்த எம்.எல்.ஏ.க்கள் 23 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் உரையாற்றினர். நீட், கொரோனா உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றன.

இதனிடையே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் பின்னர் உறுப்பினர்கள் விவாதத்துக்கு பின்னர் முதல்வர் ஆற்றிய பதிலுரையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களில் 0.15 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன” என்றார்.

TN School Reopen: ஹேப்பி நியூஸ் - தமிழகப் பள்ளி மாணவர்களே இந்த வருஷம் செம ஈஸி போங்க!

அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை. எனவேதான், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு அவசியமாகிறது” என்றும் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இவ்வளவு கோடி செலவா?

இதையடுத்து, இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300க்கும் மேற்பட்ட 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் பலனடைவார்கள் என தெரிகிறது.

முன்னதாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் அரசுக்கு உரிய பரிந்துரை வழங்க ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையமனது, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதே சமநீதியை நிலைநாட்ட வகை செய்யும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் இந்த உள் ஒதுக்கீடானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி