ஆப்நகரம்

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுற்று புதிய அரசு அமைந்ததையடுத்து, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.

TNN 25 May 2016, 9:08 am
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுற்று புதிய அரசு அமைந்ததையடுத்து, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.
Samayam Tamil tn assembly starts today newly elected mlas swearing in
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை


தமிழகத்தின் 14-வது சட்டப் பேரவைக்கான பதவிக் காலம் கடந்த 22-ம் தேதியுடன் முடிந்தது. தொடர்ந்து, 15-வது சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த 19-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் 132 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

அதனையடுத்து, அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டு, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருடன் இணைந்து அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. அதில், எம்எல்ஏக்களாக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 231 பேருக்கு சட்டப்பேரவை தற்காலிக தலைவர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதனைத்தொடர்ந்து வருகிற ஜூன் 3-ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. அன்று சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அவரை வாழ்த்தி ஆளுங் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவர். சட்டப்பேரவை தலைவர் நன்றியுரையுடன் கூட்டத்தொடர் முடிவுறும்.

அடுத்த செய்தி