ஆப்நகரம்

அண்ணாமலையை குழப்பிய நடிகர் விஜய்..! பாஜகவின் நிலைப்பாடு இதுதான்

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Sep 2021, 4:43 pm
விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.
Samayam Tamil file pic


இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதனிடையே, நடிகர் விஜய் தனது பெயரைப் பயன்படுத்தி எந்தக் கூட்டத்தையும் செயல்பாடுகளையும் நடத்துவதைத் தடுக்ககோரி அவரது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு செப்டம்பர் 27 -ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நிற்கலாம் என்றும் ஆனால் என்னுடைய பெயரை அதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றுதான் விஜய் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

ஆனால், திருப்போரூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த வேட்பாளர்கள் கையில் 'உன்னால் முடியும்' என்ற வாக்கியத்துடன் விஜயின் படம் பொறிக்கப்பட்ட கொடியை வைத்திருந்தனர். இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலுக்கு தற்போது இல்லையென்றாலும் அவருக்கு அரசியல் வரும் ஆர்வம் இருக்கிறது என்பது பட காட்சிகள், வசனங்கள், மேடை பேச்சுக்கள் மூலம் ஓரளவுக்கு புரிய வைக்கிறது.

பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்; அப்படியென்ன விஷயம்?

ஆனால், ஒரு பக்கம் அவரது ரசிகர்கள் அவரது பெயரில் தேர்தலில் நிற்பதும், மற்றொரு பக்கம் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்ற செயல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே விஜய்க்கும் பாஜகவுக்கும் கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் இப்போது தமிழகத்தில் உள்ள பாஜக தலைமை விஜயை அணுகுவது சற்றே மாறியுள்ளது.


செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, நம்முடைய நடிகர் விஜய்யை பொறுத்தவரை கருத்து எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஒருபக்கம் அவருடைய புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்னொரு பக்கம் சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் சுயேட்சையாக போட்டியிடலாம் என்று அவர் சொன்னதாக செய்திகள் வருகின்றன. ஒரு அதிகாரபூர்வ அறிவுப்பு வராததால் என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அதனால் அதை அப்படியே விட்டுவிடுவோம். மற்றபடி, நல்ல மனிதர்கள் அரசியலுக்கு நல்லது செய்ய வந்தால் ஒரு தனி மனிதனாக அதை வரவேற்பேன்'' என அண்ணாமலை கூறினார்.

அடுத்த செய்தி