ஆப்நகரம்

ரெடியாகிருச்சா தமிழகம்? - முதல்வர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை!

மாநிலம் முழுவதும் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 11 Oct 2020, 10:30 am
தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. ஏற்கனவே தென்மேற்குப் பருவமழை வாரி வழங்கிய நிலையில் அடுத்து வரும் பருவமழையும் நல்ல மழைப்பொழிவை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரம் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
Samayam Tamil CM Palaniswami


இதில் நீர் நிலைகள், மழைநீர் கால்வாய்கள் போன்றவற்றை தூர் வாருவது, கால்வாய்களில் அடைப்புகளை நீக்குதல், மழைநீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போரை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் நடப்பாண்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போதிய சரீர இடைவெளி விட்டு தங்கும் வகையில் நிவாரண முகாம்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காவிரியில் கொட்டித் தீர்க்கும் மழை; ஹேப்பி நியூஸ் சொன்ன மேட்டூர் அணை!

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக செயல்படுத்த அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். பொதுமக்களுக்கு நிவாரண முகாம்களாக அரசு கட்டடங்கள், பள்ளி, கல்லூரிகள், சமூக கூடங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படும்.

கடந்த மாதம் பல்வேறு துறை மூத்த அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கே.சண்முகம் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதில் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த செய்தி