ஆப்நகரம்

நிவர் புயல்: இழப்பீடு தொகை அறிவிப்பு!

நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்

Samayam Tamil 27 Nov 2020, 9:00 pm
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், நேற்று முன் தினம் (25.11.20) மாலை வலுப்பெற்று நேற்று அதிகாலை (26.11.20) புதுச்சேரி - மரக்காணாம் இடையே அலம்பரை பகுதியில் தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. கனமழை, சூறாவளிக் காற்றால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மரக்கிளைகள் உடைந்து விழுந்து மின் இணைப்பு பாதிக்கப்பட்டது. சாலைகள், பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த புயல் மற்றும் கனமழையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை சீர் செய்யும் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நிவர் புயலின் போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்: மணமக்களை பார்த்ததும் காரை விட்டு இறங்கிய முதல்வர்..! ஏன்?

‘நிவர்’ புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இழப்பீடு அறிவிப்பு


இழப்பீடு அறிவிப்பு


இழப்பீடு அறிவிப்பு


நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிரபயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் பெற்றுத் தரவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி