ஆப்நகரம்

விலைவாசி உயராமல் ஏழை,எளிய மக்களை பாதுகாத்து வருகிறோம்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் விலைவாசி உயராமல் ஏழை, எளிய மக்களை பாதுகாத்து வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Nov 2018, 6:38 pm
தமிழகத்தில் விலைவாசி உயராமல் ஏழை, எளிய மக்களை பாதுகாத்து வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாநகர் இரும்பாலை சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் மற்றும் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
Samayam Tamil edpaadi palanisamy salem


'ஜெயலலிதாவின் அரசு பதவியேற்ற பிறகு, கல்வியிலே ஒரு புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்கள். 2011-ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபொழுது உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை 100க்கு 21 சதவீதமாக இருந்தது. பின்னர், கல்வியில் செய்த புரட்சி, உதவிகள் வாயிலாக அரசில் 100க்கு 46.8 சதவீதம் உயர்கல்வி படிக்கின்றார்கள். இவை கல்வியில் செய்த புரட்சி, மறுமலர்ச்சி.

ஜெயலலிதா 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்தார்கள். மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை கொடுத்தார்கள். அதிமுக அரசும் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்தது. மேலும், கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, தமிழகத்திலே நம்முடைய மாணவ, மாணவிகள் விஞ்ஞான கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இதுவரை ஜெயலலிதாவின் அரசால் 38 லட்சம் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 15 லட்சம் மாணாக்கர்களுக்கு கொடுக்க இருக்கிறோம். குடிநீர் பிரச்சினையே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு ஜெயலலிதா தமிழகம் முழுவதும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமாக நடவடிக்கை எடுத்தார்கள். அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்றைக்கு அதிமுக அரசும், குடிநீர் பிரச்சினை இருக்கும் இடங்களிலெல்லாம், அதற்குத் தேவையான நிதிஒதுக்கீடு செய்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இப்பொழுது சேலம் மாவட்டத்தில் கூட தினந்தோறும் குடிநீர் வழங்கவேண்டும் என்ற நோக்கில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக, அதற்குத் தேவையான 110 கோடி ரூபாயை ஒதுக்கி, பழைய குழாய் களையெல்லாம் மாற்றியமைத்து தங்குதடையில்லாமல் சேலம் மாவட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்க விரைவில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து அரசு நிறைவேற்றி வருகிறது. பணிக்குச் செல்கின்ற மகளிருக்கு மானிய விலையிலே இருசக்கர வாகனங்களை அரசு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருக்கின்றபொழுது எப்படி விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்களோ, அதேபோல, தற்போதைய அரசும் விலைவாசி உயராமல் ஏழை, எளிய மக்களை பாதுகாத்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விழைகின்றேன். சுகாதார வசதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கிறது. இரண்டு கைகளும் இல்லாத ஒருவருக்கு, இறந்த ஒருவருடைய இரண்டு கைகளையும் எடுத்து பொறுத்தி, ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளனர் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள். மேலும், தனியார் மருத்துவமனைக்கு இணையாக நமதும் அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை போன்றவையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றோம்.'

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி