ஆப்நகரம்

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை திறக்க முதல்வர் உத்தரவு!

நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Samayam Tamil 26 Oct 2018, 3:06 pm
நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil edapadi palanisamy

‘திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தாமிரபரணி ஆற்றில் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானகால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்களிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 30.10.2018 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குனேரி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 40000 ஏக்கர் நிலங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 46107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி