ஆப்நகரம்

கொரோனா பாதிக்கப்பட்ட 86 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை: முதல்வர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிக்கப்பட்ட 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 7 Jun 2020, 6:39 pm
கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி


இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரானா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார்.

தமிழகத்தில் இதுவரை சுமார் ஆறு லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், நோய்த்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக கோயில்களில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியா?

கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு வழங்கி வரும் நிவாரணங்களை பட்டியலிட்ட முதல்வர் பழனிசாமி, மொத்தமால 53.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும், அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 8 லட்சம் மக்களுக்கு ருசியான, சூடான உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன், கூட்டுறவுக்கடன், மின்கட்டனம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் வீட்டிலேயே இருந்த மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும் , பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் கொரோனா பரவலை தடுப்பது சாத்தியமல்ல. ஒவ்வொருவரும் தம் கடமை உணர்ந்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சரீர விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி