ஆப்நகரம்

தமிழக்தில் இ-பாஸ் ரத்து: விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து குறித்து முதலமைச்சர் பழனிசாமி விரைவில் முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 25 Aug 2020, 3:23 pm
தமிழகத்தை பொறுத்தவரை கொரனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர். ஆனால், இந்த இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள் இருந்தும் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்துள்ள தமிழக அரசு, இ-பாஸ் முறையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் ஏராளமானோர் இ-பாஸ் பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பகற்கொள்ளை: டோல்கேட் வசூலை நிறுத்துங்கள்... சீமான் அறிக்கை

உரிய முகாந்திரங்களுடனுன், விண்ணப்பங்களுடனும் விண்ணப்பித்தாலும் ஏதேதோ பொருத்தமில்லாத காரணங்களைச் சொல்லி இ-பாஸ் மறுக்கப்படுவதாகவும், பத்துக்கும் மேற்பட்ட முறை விண்ணப்பித்தாலும் நேர்மையான முறையில் இ-பாஸ் கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

எனவே இந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசோ இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அறிவித்ததுடன், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இ-பாஸ் நடைமுறை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியது. அதன்தொடர்ச்சியாக, இ-பாஸ் நடைமுறையை முற்றிலும் ரத்து செய்து புதுச்ச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழகத்திலும் இ-பாஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து குறித்து முதலமைச்சர் பழனிசாமி விரைவில் முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி