ஆப்நகரம்

கலாசார ஆய்வு குழுவில் தமிழர்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்!

மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்

Samayam Tamil 23 Sep 2020, 5:34 pm
இந்திய கலாசாரத்தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆனால், இந்த குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் இல்லை. அதேபோல், மத்திய அரசு அமைத்துள்ள 16 பேர் கொண்ட குழுவில் ஒரு பெண் ஆய்வாளர் கூட இடம்பெறவில்லை என்பதும், பட்டியலினத்தவர்களோ, சிறுபான்மையினரோ ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கலாசாரத்தை ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் பெண்களும் இல்லை. திராவிட கலாசாரத்தை அறிந்த தென்னிந்தியர்களோ ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய நாட்டின் 12,000 ஆண்டுகளுக்கும் முந்தைய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பரிணாம வளர்ச்சியை கண்டறிவதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தென்னிந்தியர்கள், பெண்கள் இல்லாத கலாசாரக் குழு தேவையில்லை: குமாரசாமி காட்டம்!

மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தென்மாநிலங்களில் இருந்து, குறிப்பாக புகழ்பெற்ற கடந்த காலத்தையும், பழமையான நாகரிகங்களில் ஒன்றான திராவிட நாகரீகத்தையும் கொண்டுள்ள தமிழகத்திலிருந்து ஒருவர் கூட உறுப்பினராக இடம்பெறவில்லை என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் பழனிசாமி, கீழடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மூலம், 6ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்ற தகவலை மேற்கோள் காட்டியுள்ளதுடன், தமிழக கலாசாரமும், மொழியும் உலகின் பழமையான பாரம்பரியம் மிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.


இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் எந்தவொரு ஆய்வும் தமிழ் கலாசாரம், மொழிக்கு சரியான இடத்தை வழங்காமல் முழுமையடையாது என குறிப்பிட்டுக் காட்டியுள்ள முதல்வர் பழனிசாமி, இந்திய தொன்மையை கண்டறியும் குழுவை மாற்றியமைத்து தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்வாளர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி