ஆப்நகரம்

ரேஷன் பொருட்கள் வாங்கணுமா? இனிமே ரொம்ப ஈஸி - தொடங்கி வைக்கும் முதல்வர்!

தமிழக மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே ரேஷன் பொருட்களைப் பெறும் வண்ணம் மாநில அரசு சிறப்பு திட்டம் ஒன்றை இன்று தொடங்கி வைக்கிறது.

Samayam Tamil 21 Sep 2020, 8:28 am
தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை பெறும் வண்ணம் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் பயன்பாட்டிற்கு வரும். இதற்காக ரூ.9.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Samayam Tamil Mobile Ration Shops


அதன்பிறகு நியாய விலைக் கடைகளுக்கு அருகிலேயே அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகள்: செப்.,21ஆம் தேதி தொடக்கம்!

அதாவது சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நகரும் நியாய விலைக் கடை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகளும் அடங்கும்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் மலைப்பகுதிகள், வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி