ஆப்நகரம்

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூரில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு!

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

Samayam Tamil 28 Nov 2018, 7:53 am
தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Palanisami


ஏராளமான கால்நடைகள் பலியாகின. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன.

மாநில அரசும், தன்னார்வ குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழங்கி வருகின்றன. கஜா புயல் பாதிப்பிற்கு போதிய நிதி வழங்கக் கோரி, பிரதமர் மோடியைச் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இதையடுத்து மத்தியக் குழு ஒன்று தமிழகம் வருகை புரிந்தது. அதில் மத்திய உள்துறை இணை செயலர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் 7 பேர் இருந்தனர். அவர்கள் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்பிக்க டெல்லி சென்றனர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிடுகிறார். இதற்காக நேற்று இரவு ரயில் மூலம் நாகப்பட்டினம் சென்றடைந்தார். இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், பிற்பகல் திருவாரூர் மாவட்டத்திலும் சேதங்களைப் பார்வையிடுகிறார். இரவு ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

ஏற்கனவே புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது வானிலை மோசமாக இருந்ததால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி