ஆப்நகரம்

குஜராத்தில் தமிழ்ப் பள்ளிக்கு சிக்கல்; களத்தில் இறங்கிய தமிழக முதல்வர்!

தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2020, 2:53 pm
குஜராத் மாநிலத்தில் உள்ள நெசவுத் தொழிற்சாலைகளில் பணியாற்ற பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்றனர். அங்கேயே தங்கி தங்களது வாழ்வாதாரத்தைக் கட்டமைத்துக் கொண்டனர். இவர்களது பிள்ளைகள் படிப்பதற்காக தமிழ்வழிப் பள்ளி தொடங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்து நின்றது. இதற்கு குஜராத் மாநில அரசின் சார்பில் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் சேர்க்கை குறைவால் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Samayam Tamil CM Palaniswami


இந்நிலையில் தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து இயங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகமதாபாத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்தது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தனர். இந்த சூழலில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மூடும் நிலையில் தமிழ் பள்ளிகள்; குரல் கொடுக்கும் மக்கள் - களமிறங்குமா தமிழக அரசு?

அதில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் தமிழ்வழிப் பள்ளி செயல்பட்டு வந்தது. ஆனால் குறைவான வருகைப்பதிவைக் காரணம் காட்டி திடீரென மூடப்பட்டுள்ளன. இது மிகவும் வேதனையை அளிக்கிறது.

இதனால் தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழி நீண்ட நெடிய வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்த சூழலில் அந்த தமிழர்களின் எதிர்காலம் காக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் கடிதம்
இந்த விவகாரத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு தமிழ்வழிப் பள்ளி செயல்பட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கான மொத்த செலவையும் தமிழக அரசுக்கு ஏற்கத் தயாராக உள்ளது. தமிழர்களின் கல்வி உரிமையை குஜராத் அரசு காப்பாற்றும் என்று நம்புகிறேன். இதில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதை வரவேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி