ஆப்நகரம்

பக்தர்கள் தரிசனத்துக்கு கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி

தமிழகம் முழுவதும் பொது முடக்கத்தை நீட்டித்துள்ள தமிழக அரசு, சில தளர்வுகளுடன் கோயில்களை திறக்க அனுமதி அளித்துள்ளது

Samayam Tamil 29 Jun 2020, 10:09 pm
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஜுன் 30ஆம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கை வருகிற ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மேலும் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன்படி, பெரு நகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் மதுரையின் சில பகுதிகளில் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது வருகிற ஜூலை மாதம் 5ஆம் தேதி வரை அப்படியே அமலில் இருக்கும்.

மேற்கண்ட பகுதிகளில் ஜூலை 6ஆம் தேதிக்கு பின்னர், கடந்த 19ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையின் படி, அதாவது 19ஆம் தேதிக்கு முன்னர் இருந்த தளர்வுகளுடன் பொது முடக்கமானது வருகிற ஜூலை 31ஆம் தேதி வரை அப்பகுதிகளிலும் நீடிக்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கலாம்? முழு விவரம்

இந்த நிலையில், கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோயில்கள் திறப்பு


இந்த நடைமுறையானது பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகள்) வருகிற ஜூலை 1ஆம் தேதி முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 6ஆம் தேதி முதலும் அமலுக்கு வருகிறது.

அடுத்த செய்தி