ஆப்நகரம்

விநாயகர் சதுர்த்தியையும் விட்டு வைக்காத கொரோனா: இப்படியொரு சோதனையா?

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பொது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Aug 2020, 3:51 pm
இந்துக்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட வட மாநிலங்களில் குறிப்பாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பொதுவாக, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நாட்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்டு பூஜை செய்து இறுதி நாளன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, கோலத்தின் நடுவில் மாட்டு சாணத்தை விநாயகர் போன்று வடிவமைத்து அதன் மேலே அருகம்புல்லை வைத்து வழிபடுவர்.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்; சர்ப்ரைஸ் கொடுக்கும் ரேஷன் கடைகள்!

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 22ஆம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க பொது விழாக்களைத் தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பண்டிகை கொண்டாடத் தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

சிறிய கோயில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களும், கோயில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, உரிய தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி