ஆப்நகரம்

கொரோனா தடுப்பு பணி: 675 புதிய மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு!

கொரோனா வைரஸ் சிகிச்சை, தடுப்பு பணிகளுக்காக புதிய மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது

Samayam Tamil 27 May 2020, 4:32 pm
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 127ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொள்ளை நோயான கொரோனா கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில், கடுமையான இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், பாதிப்பு அதிகமாக இருப்பதால் இவர்களது தேவையும் அதிகளவில் உள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் சிகிச்சை, தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு ரூ.40,000 தொகுப்பூதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வார்டுகளாக மாறும் விதிமீறல் மாடிகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய நலவாழ்வு இயக்ககத்தின் மூலம் புதிய மருத்துவர்களை நியமிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடப்பட உள்ளது. நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், 3 மாத காலத்திற்கு பின்னர், தேவைக்கேற்ப அவர்களது பணி நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள்,1508 தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்களை கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்களும் 6 மாதங்களுக்கு பணியில் நியமிக்கப்பட்டனர். அதுதவிர, ஓய்வு பெறும் மருத்துவர், செவிலியர்களின் பணி காலமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி