ஆப்நகரம்

அரையாண்டு விடுமுறை: பள்ளி மாணவர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்..!

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 23 Dec 2022, 12:47 pm
பள்ளிகளில் கடந்த 16 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்கி இன்றுடன் தேர்வு முடிகிறது. இந்நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையுடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
Samayam Tamil tn schools


பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் அதையொட்டி வரும் விடுமுறையும் மிக முக்கியம் வாய்ந்தது. வருட இறுதியில் இத்தேர்வும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் என தேர்வு முடிந்த கையோடு மாணவர்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்படும். மாணவர்கள் குடும்பத்தோடு வெளியூர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் குதூகல பயணம் மேற்கொள்வார்கள். ஆனால், சில பள்ளிகள் பொதுத்தேர்வு எழுதும் 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களின் ஆசையில் மண்ணள்ளி போடும். மேலும், ஒரு காலத்தில் அட்டெண்டன்ஸ் இருந்தாலே போதும் ஆல்பாஸ் தான் என்று நினைத்திருந்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது பொதுத்தேர்வு கட்டாயம் என்பதால் அவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனி, ஞாயிறு நீங்கலாக மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்தந்த மாவட்ட கல்வித்துறை ஆணையர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும், சில பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக ஆசிரியர் சங்க அமைப்பு மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்தும் தொடர் புகார்கள் வந்தன.

இது பள்ளிக்கல்வித்துறை கவனத்துக்கு சென்ற நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை எந்த வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும் மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி