ஆப்நகரம்

தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? மாணவர்களுக்கு கொரோனா உறுதி!

அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பள்ளிகளை மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன

Samayam Tamil 26 Jan 2021, 6:28 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக, பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க கூடாது என்றும், ஏற்கனவே பள்ளிகளை திறந்த மாநிலங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை சுட்டிக் காட்டியும், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனைத் தொடர்ந்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்திய தமிழக அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது. இதனிடையே, அடுத்த கட்ட பொது முடக்கத்தை தளர்வுகளுடன் அறிவித்த தமிழக அரசு, கல்லூரி இளங்கலை இறுதி வகுப்புகளை டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளித்தது. அதன்படி கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.

அதன் தொடர்ச்சியாக, பெற்றோர்களிடம் மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய தமிழக அரசு, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கப்படும் என அறிவித்தது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகிறது.

பொதுத் தேர்வு ரத்தா? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் மாணவி ஒருவர் உள்பட மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ள்ளியில் மாணவர்களுக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளை மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும், பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்தும் வருகிற 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு மருத்துவ வல்லுஅர் குழுவுடனும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அப்போது, ஒருவேளை பள்ளிகளை மீண்டும் மூட ஆலோசனைகள் வழங்கப்படும் பட்சத்தில், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மீண்டும் மூட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி