ஆப்நகரம்

பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது..! - அமைச்சர் துரைமுருகன் வார்னிங்!

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Samayam Tamil 14 Aug 2022, 7:04 am
மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Samayam Tamil Durai Murugan


இது தொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
75 ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன். ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம்.

இராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற மாண்புமிகு அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழிந்த இராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் “நாட்டுப்பற்று” சாயம் வெளுத்துப் போயிருக்கிறது.
சென்னையில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல்..!- எந்த இடத்தில் அதிக கூட்டம் தெரியுமா..?
செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.

ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள் - தூண்டி விட்டவர்கள் – துணை போனவர்கள் ஆகியோர் மீது காவல் துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

அடுத்த செய்தி